பெரம்பூர்: கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி பக்தவச்சலம் தெருவை சேர்ந்தவர் மோகனா (54). இவருக்கு லோகேஷ் (30), சதீஷ் (27) என்ற 2 மகன்கள் உள்ளனர். இருவரும் மலேசியாவில் வேலை செய்கின்றனர். மோகனாவின் கணவர் ரமேஷ் இறந்து விட்டார். இந்தநிலையில், மூத்த மகனுக்கு திருமணம் செய்ய, மோகனா வரன் தேடி வந்துள்ளார். மேலும், பெண் பார்க்கும்படி தெரிந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி காலை, மோகனாவை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு பெண், ‘நான் திருமண தரகர். உங்களது மகனுக்கு வரன் தேடுவதாக அறிந்தேன்.
என்னிடம் நிறைய பெண்களின் புகைப்படம், ஜாதகம் உள்ளது. அதை உங்களிடம் காண்பிக்கிறேன். உங்களுக்கு பிடித்த பெண்ணை நீங்கள் தேர்வு செய்யுங்கள்,’ என்று தெரிவித்துள்ளார். அவரை தனது வீட்டிற்கு வரும்படி மோகனா கூறியுள்ளார். அதன்படி, சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண், மோகனா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மோகனா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரிடம் அந்த புரோக்கர், ‘உங்கள் வீட்டில் செய்வினை வைத்துள்ளனர். அதை சரி செய்தால் தான் உங்களது மகனுக்கு திருமணம் நடக்கும், என தெரிவித்துள்ளார்.
அதற்கு என்ன செய்ய வேண்டும், என மோகனா கேட்டபோது, ‘வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீர் கொண்டு வா’ என்று கூறியுள்ளார். அதன்படி மோகனா கொண்டுவந்து கொடுத்தபோது, அதை வைத்து பூஜை செய்வது போல் நடித்து, அந்த நீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மோகனாவை குடிக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் மோகனா மயங்கி விழுந்ததும் அவர் அணிந்திருந்த 3 சவரன் செயின் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பு செல்போனை எடுத்துக்கொண்டு அந்த பெண் தப்பினார்.
இதன்பிறகு மயக்கம் தெளிந்து எழுந்த மோகனா எழுந்து பார்த்தபோது, நகை, செல்போனுடன் அந்த பெண் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து மோகனா கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குநகபதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து செங்கல்பட்டு மாவட்டம் ஒக்கியம்பாக்கம் ஸ்ரீசாய் நகர் பகுதியை சேர்ந்த பத்மாவதி (56) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் இவர் மீது ஏற்கனவே 2 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு ஜோதிடரை பார்க்க சென்ற பத்மாவதி, தன்னை திருமண புரோக்கர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவரிடம் இருந்து மோகனா செல்போன் எண்ணை வாங்கி, அதன்மூலம் நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரிடம் இருந்து மோகனாவின் 3 சவரன் நகை, ஒரு செல்போனை மீட்டனர். பின்னர் பத்மாவதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வீட்டில் செய்வினை இருப்பதாக கூறி பெண்ணிடம் நகை திருடிய திருமண புரோக்கர் கைது appeared first on Dinakaran.