வீடுகள், கடைகள், வாகனங்களை உடைத்து யானைகள் அட்டகாசம்: நீலகிரியில் நள்ளிரவு பரபரப்பு

4 months ago 16

ஊட்டி: நீலகிரியில் நள்ளிரவில் கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்களை உடைத்து சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாதிரிமூலா, அத்திச்சால், செம்பக்கொல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் உணவு தேடி வரும் காட்டு யானைகள் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை உடைத்து மிதித்து தின்று சேதம் செய்து வருகிறது. அய்யன்கொல்லியிலிருந்து கொளப்பள்ளி பந்தலூர்- எருமாடு செல்லும் சாலையில் அடிக்கடி வாகனங்களையும் வழிமறித்து வருகிறது. வீடுகள், கடைகள் வாகனங்களை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனத்திலிருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள், பாதிரிமூலா பகுதிக்குள் புகுந்து கூலித்தொழிலாளி விஜயலட்சுமி என்பவரின் குடிசை வீட்டை உடைத்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் மூர்த்தி ஆகியோர் தப்பியோடி உயிர் பிழைத்தனர். அங்கிருந்து நகர்ந்த காட்டு யானைகள் அதே பகுதியில் உள்ள யோகரத்தினம் என்பவரது வீட்டின் கதவை உடைத்து வீட்டின் உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை தின்றது. வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வீடுகள், கடைகள், வாகனங்களை உடைத்து யானைகள் அட்டகாசம்: நீலகிரியில் நள்ளிரவு பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article