
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக தென் மாவட்டங்களில், குறிப்பாக திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 'மா' விவசாயிகள் பயன்பெறும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாம்பழக் கூழ் தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 150 முதல் 250 லாரி வரை, அதாவது 1500 டன் முதல் 2 ஆயிரம் டன் வரை மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது.
தற்போது உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். தற்போது 1 கிலோ மாம்பழத்திற்கு ரூ.5 மட்டுமே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கிறார்கள்.
எனவே, 'மா' விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசிடம் வைத்தும், இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே, தென் மாவட்ட 'மா' விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்து வைக்காத தி.மு.க. அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பஸ் நிலையம் அருகில் 20-ந்தேதி (இன்று) காலை 9.30 மணி அளவில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்குவார். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலை வகிப்பார். திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர் ஏ. மருதராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.