ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர மூளைச்சலவை... கைதான 4 பேரிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை

7 hours ago 2

கோவை உக்கடத்தில் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி, முபின் வீட்டில் சோதனை நடத்தி பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள், குறியீடுகள் அடங்கிய குறிப்புகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் முபின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இருந்ததும், அவர் மிகப்பெரிய தாக்குதல் திட்டத்துக்கு தயாராகி வந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலரை கைது செய்து உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு சென்னை அரபி கல்லூரி நிறுவனர் ஜமீல் பாட்ஷா, இர்ஷாத் செய்யது, அப்துர் ரகுமான், முகமது உசேன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோவை போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த அரபிகல்லூரி முதல்வரான அகமது அலி, அரபி கல்லூரி ஊழியரான உக்கடம் புல்லுக்காட்டை சேர்ந்த ஜவஹர் சாதிக், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராஜா முகமது மற்றும் சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த சேக் தாவூத் ஆகிய 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கைதான 4 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். கைதான 4 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சென்னை அரபி கல்லூரி நிறுவனரான ஜமீல் பாட்ஷாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கைதானவர்கள் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்துள்ளனர். இதேபோன்று கைதான 4 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்க இளைஞர்கள் மற்றும் மாணவர்களை மூளைச்சலவை செய்ததாகவும், அது குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்க எத்தனை பேர் மூளைச்சலவை செய்யப்பட்டனர் என்று கைதான 4 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Entire Article