இரண்டாக இருந்த விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு அதிமுக-விலிருந்து வந்த லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. 2021-ல் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் இந்த லட்சுமணன் என்பது கூடுதல் தகவல்.
ஒரு காலத்தில் பாமக இதேபோல் மாவட்டங்களைப் பிரித்து அதிகாரப் பரவலை செய்தபோது அதை பரிகாசம் செய்த கட்சி திமுக. இப்போது அவர்களே பாமக வழிக்குப் போயிருக்கிறார்கள். கள்ளகுறிச்சியை உள்ளடக்கிய ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கும் அமைச்சர் பொன்முடி தான் செயலாளராக இருந்தார்.