விமான படை தளம் மீது தாக்குதல்; ஈரான் தூதரை அழைத்து கத்தார் கடும் கண்டனம்

4 hours ago 2

தோஹா,

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய போரில் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. இதில், ஈரானின் 3 முக்கிய அணு உலைகளை இலக்காக கொண்டு அமெரிக்கா தாக்கியது. எனினும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்பே எடுத்து விட்டோம் என ஈரான் பதிலளித்தது.

ஆனால், அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் எச்சரித்தது. தொடர்ந்து பதில் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் படைகள் நிறுத்தப்பட்ட நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்கியது. இதில் கத்தார் நாடும் தாக்கப்பட்டது.

இதேபோன்று, ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து வடக்கே அல்-தஜி என்ற ராணுவ தளம் அமைந்துள்ளது. இதில் ராணுவ கண்காணிப்பு பணிக்கான ரேடார் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஈரான் செயலுக்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கத்தார் நாட்டின் வெளிவிவகார அமைச்சகம், கத்தாருக்கான ஈரான் தூதர் அலி சலேஹாபதியை அழைத்து, கத்தார் நாட்டில் அல்-உதீத் விமான படை தளத்தின் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி கத்தார் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ஈரானை கடுமையாக சாடியுள்ளது. கத்தாரின் இறையாண்மை மற்றும் வான்வெளியை வெளிப்படையாக மீறியதுடன், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. ஆவண விதிகளையும் இந்த தாக்குதல் மீறியுள்ளது. சர்வதேச விதிகளின்படி, இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் உரிமை கத்தாருக்கு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

ஈரானிய தூதருடன், கத்தாரின் வெளிவிவகார துறை மந்திரி சுல்தான் பின் சாத் அல் முரைகி நடத்திய சந்திப்பின்போது, கத்தார் மற்றும் ஈரான் நாடுகள் இடையேயான நெருங்கிய உறவுகள் மற்றும் நல்ல நட்பு என்ற கொள்கையை முற்றிலும் மீறும் வகையில் உள்ளது. பதற்றம் மேலும் அதிகரிக்காமல் அதனை தடுக்கும் வகையில், உடனடியாக பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அளவில் தொடர்பு கொள்ள வேண்டிய தேவை ஈரானுக்கு உள்ளது என்று அப்போது அல் முரைகி வலியுறுத்தினார்.

Read Entire Article