சென்னை: விழுப்புரம், திருப்பூர், சேலம், தர்மபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27.8.2021 அன்று சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்தார். அதன்படி 26 மாவட்டங்களில் உள்ள 67 முகாம்களில் 7,469 புதிய வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 3,510 புதிய வீடுகள் ரூ.180 கோடியே 34 லட்சம் செலவில் 19 மாவட்டங்களில் உள்ள 35 முகாம்களில் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, இவற்றில், ஏற்கனவே 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் கட்டிமுடிக்கப்பட்ட 2,781 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி நகர், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணை மற்றும் கேசர்குளி அணை, விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரம் ஆகிய 6 இடங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38 கோடியே 76 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தார். மேலும், மேற்கண்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.7 கோடியே 33 லட்சம் செலவில் சாலைகள், மின்சார வசதி, கழிவுநீர் கால்வாய், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சா.மு.நாசர், தலைமை செயலாளர் முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார், பொதுத்துறை சிறப்பு செயலாளர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post விழுப்புரம், திருப்பூர், சேலம், தர்மபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இலங்கை தமிழர் முகாம்களில் ரூ.38.76 கோடியில் 729 வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.