விழுப்புரம் அருகே துணிகரம் ஆசிரியர் வீட்டில் 17.5 பவுன் நகை திருட்டு

2 weeks ago 2

 

விழுப்புரம், ஜன. 18: அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 17.5 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் அருகே சாலாமேடு என்ஜிஜிஓ காலனியை சேர்ந்தவர் அருள்லியோ கிங்(47). காரப்பட்டு அரசு மேல்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி கொண்டு சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 17.5 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி, ரூ.2000 பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.  இது குறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். திருடு போன நகை, வெள்ளியின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும். ஆசிரியர் வீட்டில் தங்க நகை, வெள்ளி பொருட்கள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விழுப்புரம் அருகே துணிகரம் ஆசிரியர் வீட்டில் 17.5 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article