
சென்னை சர்வதேசவிமான நிலையம் உள்ளே இருந்து விரைவில் மாநகர போக்குவரத்து பஸ் சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி சென்னை விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே சென்று, பயணிகளை ஏற்றவும், இறக்கவும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விமான நிலையங்களுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக விமான நிலைய முனையத்தில் இருந்து பஸ் சேவையை பெற, உடைமைகளை சுமந்துகொண்டு ஜிஎஸ்டி சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டும். அதிலும் கோடை வெயில், கொட்டும் மழைக்காலத்தில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்நிலையில் அதற்கான தீர்வு விரைவில் மாநகர பஸ் போக்குவரத்து மூலம் கிடைக்க உள்ளது. இதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையும், ரேடியல் சாலை, சோழிங்க நல்லூர் வழியாக அக்கரை வரையும் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜிஎஸ்டி சாலையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விமான நிலையத்திற்குள் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ள மாநகரபோக்குவரத்து கழகம், இதற்கான கோரிக்கையை விமான அமைச்சகத்திடம் முன்வைத்துள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் அரசு பஸ்கள் விரைவில் விமான நிலைய வளாகத்திற்குள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.