
நாமக்கல்,
புதுச்சத்திரம் அருகே உள்ளது பாச்சல் பஸ் நிலையம். அங்கு குணசேகரன் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி தனலட்சுமி பேக்கரியை கண்காணித்து வந்தார். அந்த பேக்கரியில் கெட்டு போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று நேற்று வைரலானது.
அதில், பெண் வாடிக்கையாளர் ஒருவர் கெட்டுப்போன கேக்கை எதற்காக விற்பனை செய்தீர்கள் என கேட்பதும், அந்த கேக்கை நீங்களே சாப்பிடுங்கள் என அந்த பெண் தனலட்சுமிக்கு ஊட்ட முற்படுவதும் போன்ற காட்சிகளாக இருந்தது.
இதையடுத்து அந்த பேக்கரியில் நாமக்கல் மற்றும் புதுச்சத்திரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும் உணவு பொருட்களுக்கான தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த பேக்கரி கடைக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய விசாரணையில், சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவானது, சுமார் 6 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பது தெரியவந்தது. இதையடுத்து எதற்காக தற்போது அந்த வீடியோ பரப்பப்படுகிறது?, பாதிக்கப்பட்ட பெண் யார்? ஆகியவை குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.