விருதுநகர் அருகே லாரி மீது கல்லூரி வாகனம் மோதி டிரைவர் உயிரிழப்பு: மாணவிகள் உட்பட 10 பேர் படுகாயம்

4 hours ago 2


விருதுநகர்: விருதுநகர் அருகே டிப்பர் லாரி மீது இன்று காலை தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் மாணவிகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரி நிறுவன பேருந்து, இன்று காலை விருதுநகரில் மாணவ-மாணவிகள் ஏற்றி கொண்டு கல்லூரிக்கு சென்றது. அழகாபுரி பிரிவில் சென்ற போது, சாலையோரம் நின்றிருந்த டிப்பர் லாரி மீது நேருக்கு நேர் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவர் விருதுநகர் யானைக்குழாய் தெருவை சேர்ந்த தங்க மாரியப்பன் (45) சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் இந்த விபத்தில் பேருந்து டிரைவர் அருப்புக்கோட்டை புளியம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (58), பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் சங்கரி, ஆஷிபா, கிருத்திகா, அபிஷா, தாரணி, சண்முகப்பிரியா, காயத்திரி மற்றும் பேராசிரியர்கள் ஜெயசித்ரா, ஜெயபிரகாஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த ஆமத்தூர் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post விருதுநகர் அருகே லாரி மீது கல்லூரி வாகனம் மோதி டிரைவர் உயிரிழப்பு: மாணவிகள் உட்பட 10 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article