விராட் - ரோகித்தை இணைத்து அப்படி அழைப்பதை நிறுத்துங்கள் - இந்திய முன்னாள் வீரர் கடும் விமர்சனம்

3 hours ago 2

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் செயல்பட உள்ளனர்.

இந்த தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். விரைவில் இந்த டெஸ்ட் தொடர் தொடங்க இருந்த நிலையில் இவர்களின் விலகல் இந்திய கிரிக்கெட் அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

முன்னதாக பார்டர் - கவாஸ்கர் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடர்களில் விராட் மற்றும் ரோகித் சொதப்பியதால் அவர்களை அணியிலிருந்து நீக்க தேர்வுக்குழு மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்னதாக இருவரும் தாங்களாகவே ஓய்வை அறிவித்து விட்டனர்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு நிகராக ரோகித் சர்மாவை ஒப்பிட்டு பேசுவது தவறானது என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை நெருங்க முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித், விராட் கோலி இல்லாததால் இம்முறை இங்கிலாந்தில் அழுத்தத்தை தான் உணரப் போவதில்லை என்று புதிய கேப்டன் சுப்மன் கில் தெரிவித்திருந்தார். அது என் மனதில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது. அது சிறிது காலமாகவே இருந்து வருகிறது. அது சுப்மன் கில் கூறியதை பற்றியது அல்ல.

அவர் கூறியது அவர்கள் (விராட் மற்றும் ரோகித்) இருவரையும் ஒன்றாக ஒரே பிரிவில் இணைக்கிறது. சொல்லப்போனால் அதற்கு "ரோகோ" என்ற பெயரையும் நாம் வைத்துள்ளோம். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நீங்கள் அவ்வாறு ஒப்பிடுவதை நான் புரிந்து கொள்கிறேன். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் இருவரையும் நான் ஒரே பிரிவில் போட மாட்டேன். அதற்காக உங்களுக்கு நான் சில நம்பர்களை கொடுக்கிறேன்.

சேனா நாடுகளில்தான் உண்மையான பேட்ஸ்மேனின் தரம் மதிப்பிடப்படும். அங்கே விராட் கோலி 12 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் ரோகித் சர்மா ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். அவருடைய சராசரி 40. ஒருவேளை இதே நிலைமையில் ரோகித் சர்மா இங்கிலாந்தில் விளையாடியிருந்தால் அவருடைய சராசரி 30க்கும் கீழே குறைந்திருக்கும் என்று தைரியமாக சொல்வேன்.

டெஸ்ட் போட்டிகள் என்று வரும்போது விராட் கோலி முற்றிலும் வித்தியாசமான பிரிவில் இருப்பார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை ஒரே பிராக்கெட்டில் போடுவதை நிறுத்துங்கள். சொல்லப்போனால் ரோகோ என்று சொல்வதை நிறுத்துங்கள் என நான் சொல்வேன்" என்று கூறினார்.

Read Entire Article