கோவில்பட்டி: வியாபாரி வீட்டில் ரூ.51 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த சென்னை வாலிபர் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 45 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகம்மது சாலியபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் முகம்மது சையது சுலைமான் (50). இறைச்சி கடை வைத்துள்ளார். மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வாங்கி விற்பனை செய்து வருகிறார். முகம்மது சையது சுலைமானுக்கு அந்த தெருவில் பழைய மற்றும் புதிய வீடு என எதிரெதிர் 2 வீடுகள் உள்ளன. கடந்த 8ம்தேதி இரவு முகம்மது சையது சுலைமான் புதிய வீட்டில் சாப்பிட்டு விட்டு எதிரே உள்ள பழைய வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கினார்.
இந்நிலையில் மறுநாள் (9ம்தேதி) காலையில் எழுந்து புதிய வீட்டிற்கு சென்ற போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.26 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.51 லட்சம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்நிலையில், கோவில்பட்டி அருகே போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், சென்னை புளியந்தோப்பை சேர்ந்த சரத்குமார் (24), காஞ்சிபுரத்தை சேர்ந்த அக்பர்அலி என்ற அபூபக்கர் (23) ஆகியோர் என்பதும், கோவில்பட்டி முகம்மது சையது சுலைமான் வீட்டில் பணம் மற்றும் நகை திருடியவர்கள் என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ராஜபாளையம் அருகே தென்னந்தோப்பில் பதுங்கி இருந்த கணேஷ் ராஜ் என்ற ஜக்கு கணேஷ் (20), சக்திகணேஷ் (24) ஆகியோரை பிடித்து கிழக்கு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு சரத்குமார் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 45 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரும் கோவில்பட்டி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post வியாபாரி வீட்டில் ரூ.51 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த சென்னை வாலிபர் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.