விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த முதல்வரிடம், வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும் என பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகரில் நாளை நடைபெறும் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக இன்று (நவ.9) விருதுநகர் வந்த முதல்வர் ஸ்டாலின், விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூர் மேலசின்னையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கு நேரில் சென்று பட்டாசு ஆலையில் ஆய்வு செய்து தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இது குறித்து முதல்வரிடம் பேசிய பட்டாசு தொழிலாளி இசக்கியம்மாள் கூறுகையில், “முதல்வர் பட்டாசு உற்பத்தி குறித்தும், விபத்து எதும் நடந்துள்ளதா, மாதம் ரூ.1,000 மகளிர் உரிமை தொகை முறையாக வருகிறதா?, உங்களுக்கு ஏதும் குறைகள் உள்ளதா? எனக் கேட்டார்.