
புதுடெல்லி,
பூமி தொடர்பான ஆராய்ச்சிக்கு, தற்போது ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி வருகிறோம். இந்த செயற்கைக்கோள் குறிப்பிட்ட காலம் விண்வெளியில் மிதந்தபடி பூமியை சுற்றி வரும். அதில் உள்ள நவீன கேமராக்கள் பூமியை பல்வேறு கோணங்களில் படம் எடுத்து அனுப்பும். அதில் உள்ள கருவிகள் விண்வெளியை ஆய்வு செய்யும். அவை அனுப்பும் தரவுகளின் அடிப்படையில் இங்கே ஆராய்ச்சிகள் நடைபெறும்.
ஆனால், செயற்கைக்கோள் செய்யும் வேலையை மனிதனே நேரடியாக சென்று அங்கிருந்து செய்வதுடன் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டால் எப்படி இருக்கும்? என்று தோன்றியதன் அடிப்படையில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பெரும் பொருட்செலவு ஏற்படும் என்பதால், ஒரே நாடு அதில் இறங்காமல், அமெரிக்காவின் நாசா, ரஷியாவின் நோஸ்கோஸ்மாஸ், ஐரோப்பாவின் இ.எஸ்.ஏ., ஜப்பானின் ஜாசா, கனடாவின் சி.எஸ்.ஏ. ஆகிய ஆராய்ச்சி நிறுவனங்கள் முன்வந்தன.
அதனைத் தொடர்ந்து, பூமிக்கு மேலே 400 கி.மீ. (250 மைல்) உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கும் பணி 1998-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், அதை கட்டமைப்பது என்பது கற்பனைக்கும் எட்டாத விஷயமாகவே இருந்தது.
நிலத்தில் ஒரு வீடுகட்டுவதற்கு லாரிகளில் கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். ஆனால், சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்க ஒவ்வொரு பொருளையும் ராக்கெட் மூலமே எடுத்துச் செல்ல வேண்டி இருந்தது. 2 ஆண்டுகள் இந்தப் பணிகள் நடைபெற்றன. ஒரு வழியாக பணிகள் முடிந்து 2000-ம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி முதல் குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது. இந்த விண்வெளி நிலையம் 400 டன் (ஒரு டன் ஆயிரம் கிலோ) எடை கொண்டது. 109 மீட்டர் நீளம், 73 மீட்டர் அகலம் கொண்டது. அதாவது, ஒரு கால்பந்து மைதானத்தின் அளவை ஒத்தது. இதில், சுமார் 15 பேர் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும். பெரிய ஆய்வு அறைகளுடன் 2 குளியல் அறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம், பெரிய கண்ணாடி ஜன்னல் ஆகியவை உள்ளன.
இந்த சர்வதேச விண்வெளி நிலையம் மணிக்கு 17,500 மைல் வேகத்தில் பூமியை சுற்றி வருகிறது. அதாவது, 93 நிமிடங்களில் பூமியை ஒருமுறை சுற்றி விடுகிறது. அதாவது, 1½ மணி நேரத்தில் இரவு-பகலை சந்தித்து விடுகிறது. இப்படி, ஒரு நாளைக்கு 15 முறை பூமியை முழுமையாக சுற்றி, மேற்கொண்டு பாதி தூரத்தையும் கடந்து விடுகிறது.
இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே 7 பேர் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுடன் இணைந்து, 7 புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இஸ்ரோ அனுப்பிய இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் பால்கன்-9 ராக்கெட் மூலம் இன்று மாலை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளனர்.
விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை, ஆக்சிஜன் இல்லாத நிலையில், தட்பவெப்பநிலையும் மாறுபாடு கொண்டதன் அடிப்படையில் சர்வதேச விண்வெளி நிலையம் இவர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்தியா அடுத்து மேற்கொள்ள உள்ள ககன்யான் திட்டத்துக்கும் இந்த விண்வெளி பயணம் முன்னோட்டமாக இருக்கும் என்பதால், இந்திய விஞ்ஞானிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 14 நாட்கள் இவர்கள் முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.அதாவது, பாசிப்பயறு, வெந்தயம் உள்ளிட்ட தானியங்களை முளைக்க வைக்க இருக்கின்றனர்.
ஏன் இந்த ஆராய்ச்சி?
ஏன் இந்த ஆராய்ச்சி? என்பது பலரது கேள்வியாக இருக்கலாம். பூமியிலும், விண்வெளியிலும் ஒரே நேரத்தில் தானியங்களின் விதைகள் பயிரிடப்படும். 14 நாட்களுக்கு பிறகு விண்வெளியில் முளைக்க வைக்கப்பட்ட தானியத்தின் செடிகள் பூமிக்கு கொண்டுவரப்படும். அதே நேரத்தில், பூமியில் முளைக்க வைக்கப்பட்ட தானிய செடிகளுடன் ஒப்பிடப்படும். அதன் வளர்ச்சி, மூலக்கூறுகள் என்று ஒவ்வொன்றும் ஆராய்ந்து ஒப்பிட்டு பார்க்கப்படும். இரண்டும் ஒன்றாக இருந்தால், இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அதாவது, சூரியனை சுற்றிவரும் பூமியைப்போல, 8 பெரிய கோள்களும், எண்ணில் அடங்காத சிறிய கோள்களும் பூமியை வெவ்வேறு தூரத்தில், வெவ்வேறு கோணங்களில் சுற்றி வருகின்றன. தொலைதூரத்தில் உள்ள கோள்களை மனிதன் ஆராய்ச்சி செய்ய செல்ல வேண்டும் என்றால், அதற்கு பல மாதங்கள் ஆகும். குறிப்பாக, பூமிக்கு அடுத்து உள்ள கோளான செவ்வாயை ஆராய வேண்டும் என்றால் கூட 8 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும்.
அந்த வகையில், மனிதன் செல்லும் விண்கலம் வேண்டுமானால் சோலார் மூலம் சூரிய சக்தியை தொடர்ந்து எடுத்துக்கொண்டு நீண்ட தூரம் பயணிக்க முடியும். ஆனால், மனிதன் ஒரு ஆண்டுக்கான உணவை எடுத்துச் செல்ல முடியாது. எனவே, உணவுப் பொருட்களை விண்வெளியில் விளைவித்தே சாப்பிட வேண்டியது இருக்கும். அதற்கான சாத்தியகூறுகள் தொடர்பான ஆராய்ச்சிதான் தற்போது நடக்க இருக்கிறது. இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால், தொலைதூர கோள்களையும் மனிதன் சென்று ஆராய்ச்சி மேற்கொள்ள முடியும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம்
தற்போதைய சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2031-ம் ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த விண்வெளி நிலையத்தை பிரித்து எடுப்பதற்கே பல ஆண்டுகள் ஆகும் என்பதால், தற்போதைய விண்வெளி வீரர்களின் பயணம்தான் கடைசிப் பயணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.