விண்வெளியில் இருந்து கேட்ட இந்திய குரல்

5 hours ago 3

சென்னை,

'என் இந்திய மக்களுக்கு நமஸ்காரம். என்ன அழகான பயணம்! 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளிக்கு மீண்டும் வந்திருக்கிறோம். இது ஒரு அற்புதமான பயணம். நாங்கள் பூமியை வினாடிக்கு 7.5 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறோம். என் தோளில் உள்ள மூவர்ணக்கொடி நான் உங்கள் அனைவரோடும் இருக்கிறேன் என்று சொல்கிறது. என்னுடைய இந்த பயணம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் தொடக்கம் அல்ல, இந்தியாவின் மனித விண்வெளி திட்டத்துக்கான தொடக்கமாகும். நீங்கள் அனைவரும் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் நெஞ்சமெல்லாம் பெருமையால் விம்ம வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய விண்வெளி திட்டத்தை தொடங்குவோம். ஜெய் இந்தியா! ஜெய் பாரத்' என்று ஒரு குரல் விண்வெளியில் இருந்து கேட்டது.

இது இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்குள் நுழைந்த நேரத்தில் அங்கிருந்து கூறியதாகும். இதைக்கேட்டு நாட்டுமக்கள் அனைவரும் பூரித்தனர். அமெரிக்காவில் உள்ள ஆக்சியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம் நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவற்றோடு இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினுடைய டிராகன் விண்கலம் மற்றும் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 4 விண்வெளி வீரர்களை அனுப்பி 14 நாட்கள் தங்கியிருந்து 60 ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் வகையிலான ஆக்சியம்-4 திட்டத்தை தயாரித்தது. இதற்காக இந்தியாவில் இருந்து இஸ்ரோ மூலம் ஏற்கனவே மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள 4 வீரர்களில் ஒருவரான இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான உத்தரபிரதேசத்தை சேர்ந்த 39 வயதான சுபான்ஷு சுக்லா சென்றிருக்கிறார்.

அவருடன் அமெரிக்காவை சேர்ந்த பெண் விண்வெளி வீராங்கனையான 65 வயது பெக்கி விட்சன், போலந்து நாட்டின் 41 வயதான ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரி நாட்டை சேர்ந்த 34 வயதான திபோர் கபுவும் சென்றார்கள். இந்த அணிக்கு கமாண்டராக பெண் விண்வெளி வீரர் பெக்கி விட்சன் செயல்படுகிறார். இவர் 5 விண்வெளி பயணம் சென்று, 675 நாட்கள் விண்வெளியில் தங்கியிருக்கிறார். அவர் இதுவரை சென்ற 3 பயணங்களில் 2 முறை கமாண்டராக இருந்திருக்கிறார். சுபான்ஷு சுக்லாவுக்கும், மற்ற இருவருக்கும் இதுதான் முதல் பயணம். இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 வீரர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த 4 பேரும் இந்திய நேரப்படி நேற்று மாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்தவுடன் அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நால்வரும் 14 நாட்கள் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிகளை முடித்துவிட்டு பூமிக்கு திரும்புவார்கள். சுபான்ஷு சுக்லாவுக்கு கிடைத்த இந்த வாய்ப்புக்காக இந்திய விண்வெளித்துறை ரூ.548 கோடி கட்டணம் கொடுத்திருக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்காக சுபான்ஷு சுக்லா கேரட் அல்வா, பாசி பருப்பு அல்வா, மாம்பழச்சாறு ஆகியவற்றை கொண்டுபோயிருக்கிறார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இதுவரை 23 நாடுகளை சேர்ந்த 280 பேர் போயிருந்தாலும் முதல் முறையாக இப்போதுதான் ஒரு இந்தியர் சென்றிருக்கிறார் என்ற வகையில் ஒவ்வொரு இந்தியனுக்கும் இதில் பெருமை உண்டு.

Read Entire Article