அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஒரே துறையின்கீழ் கொண்டு வர வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்

6 hours ago 1

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக விளம்பரப்படுத்திக் கொண்டாலும், தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள பல பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலும், பல வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாமலும் இருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அந்த வகையில், 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க.வால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எண் 236-ல் தமிழ்நாட்டின் பல துறைகளில் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகள் அனைத்தும் ஒரே துறையின்கீழ் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்தவொரு நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை.

பொது விநியோகத் திட்டம் என்பது கூட்டுறவுத் துறை, இதர கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்ற அமைப்புகளின்கீழ் செயல்பட்டு வரும் 37,328 முழு நேர மற்றும் பகுதி நேர நியாய விலைக் கடைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அனைத்து நியாய விலைக் கடைகளும் ஒரே துறையின்கீழ் கொண்டு வரப்படும் என்பதுதான் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி. இந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் அனைவரும் ஒரே பணியை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால், அவர்களுக்கு வெவ்வேறு விதமான ஊதியம் வழங்கப்படுகிறது என்றும், இந்த ஊதிய முரண்பாட்டைக் களையும் வகையில், அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஒரே துறையின்கீழ் கொண்டு வந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகின்றது. இது தொடர்பாக அரசுக்கு பல கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது. சொன்னதைச் செய்வோம் என்று சொல்லிவிட்டு அதுகுறித்து வாய் திறக்காதது ரேஷன் கடை ஊழியர்களை ஏமாற்றும் செயல். இது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தி.மு.க. ஆட்சி முடிவதற்கு இன்னும் பத்து மாதங்களே இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஒரே துறையின்கீழ் கொண்டு வந்து, பணியாளர்களுக்குள் நிலவும் ஊதிய முரண்பாட்டினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article