விசாகப்பட்டினத்தில் போலீசார் அதிரடி அதிக ஒலி எழுப்பிய பைக் சைலன்சர்கள் நசுக்கி அழிப்பு

7 months ago 21

*70,500 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

திருமலை : விசாகப்பட்டினத்தில் அதிக ஒலி எழுப்பிய பைக் சைலன்சர்களை போலீசார் ரோடு ரோலர் மூலம் நசுக்கி அழித்தனர். மேலும் விதிமீறிய 70,500 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பைக் சைலன்சர்களை மாற்றம் செய்து அதிக ஒலி எழுப்பும் விதமாக மாற்றியமைத்து, வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழக்கமாக பைக் நிறுவனத்தில் உள்ள சைலன்சர்களை கழற்றி மாற்றுவதால் அதிக சத்தம் மற்றும் புகையை கிளப்பி வருகின்றனர்.

இதுகுறித்து மாநகரில் உள்ள பலர், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து விசாகப்பட்டினம் நகர போலீஸ் கமிஷனர் மற்றும் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவின்படி, போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில், பைக்கில் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களுடன் சாலையில் வந்து மக்களை அச்சமடைய செய்த 181 பேரின் பைக் சைலன்சர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பைக் சைலன்சர்களை போலீசார் நேற்று முன்தினம் நடுரோட்டில் வைத்து அதன் மீது ரோடு ரோலர் ஏற்றி நசுக்கி அழித்தனர்.

இத்தகைய சைலன்சர்களைப் பயன்படுத்துவது இந்திய மோட்டார் வாகனச் சட்டம்-1988ன் பிரிவு 190(ii) இன் கீழ் குற்றம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், ஓட்டுனர் உரிமமும் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும். 2வது முறை தவறும் பட்சத்தில் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம், குறிப்பிட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படும். சைலன்சர் மாற்றம் செய்வதால் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முத்த குடிமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பெற்றோர்கள் இந்த விவகாரத்தில் பிள்ளைகளிடம் கண்டிப்புடன் இருக்க வேண்டும் என விசாகப்பட்டினம் நகர போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பொருத்தும் மெக்கானிக் கடைகள் இனி இதுபோன்ற சைலன்சர்களை வாகனங்களில் பொருத்தக்கூடாது என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் இதுவரை, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக சுமார் 70,500 இரு சக்கர வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டுபவர்களுடன், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

The post விசாகப்பட்டினத்தில் போலீசார் அதிரடி அதிக ஒலி எழுப்பிய பைக் சைலன்சர்கள் நசுக்கி அழிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article