விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர். ஆந்திரப் பிரதேசம் மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவிலில் சந்தன உற்சவ விழா நடந்தது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சிம்மாச்சலம் அப்பன்னசாமி கோயிலில் சந்தனக்காப்பு அலங்காரம் காண வந்த பக்தர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது. நள்ளிரவில் சிம்மாச்சலத்தில் பலத்த மழை பெய்த நிலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்துகுள்ளானது.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்க காத்திருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றிய வழக்கு பதிவு செய்துள்ள சிம்மாச்சலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் வங்கலாபுடி அனிதாவும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போது பேசிய அவர்; இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. “கனமழை பெய்தது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இது ஒரு துரதிர்ஷ்டவசமானது,” என்று கூறினார்.
The post விசாகப்பட்டினத்தில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி.. கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் உயிரிழந்த சோகம் appeared first on Dinakaran.