மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 33வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் நடப்பு சீசனில் 6 போட்டிகளில் ஆடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா காயத்தில் இருந்து மீண்டு களத்துக்கு திரும்பி உள்ள நிலையில் தனது சிறப்பான திறனை வெளிப்படுத்துவதில் தடுமாறி வருகிறார்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் ஏதும் கைப்பற்றாத பும்ரா, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் யார்க்கர்களை வீசுவதில் தடுமாற்றம் அடைந்து 44 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். எனவே இன்றைய போட்டி அவருக்கு சோதனை களமாக இருக்கும். ஏனெனில் சன்ரைசர்ஸ் அணி கடந்த போட்டியில் 246 ரன்கள் இலக்கை துரத்தி வெற்றிபெற்றது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன் ஆகியோரின் தாக்குதல் பேட்டிங் வரிசை பும்ராவுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
இது ஒருபுறம் இருக்க பேட்டிங்கில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் பார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. 5 போட்டிகளில் ஆடி அவர் 56 ரன்களே எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா பார்முக்கு திரும்புவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். தொடக்க வீரரான ரியான் ரிக்கெல்டன், நடுவரிசை பேட்ஸ்மேனான திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். சூர்யகுமார் யாதவ், நமன் திர், கேப்டன் ஹர்திக் ஆகியாரும் நிலைத்தன்மையுடன் ஆடினால் அணியின் பலம் அதிகரிக்கும்.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் ஆடி 2 வெற்றி 4 தோல்விகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி தனது கடைசி போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியில் அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்களும், டிராவிஸ் ஹெட் 37 பந்துகளில் 66 ரன்களும் விளாசி 246 ரன்கள் இலக்கை எளிதாக எட்ட உதவியிருந்தனர்.
இதுபோல் வான்கடே மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி 20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 135 ரன்களை விளாசி மிரட்டியிருந்தார். இதனால் அவர், மும்பை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரும் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளக்கூடியவர்களாக திகழ்கின்றனர். சன்ரைசர்ஸ்-மும்பை இரண்டு அணிகளும் அடுத்த வெற்றிக்காக மல்லுக்கட்டும் என்பதால் வான்கடேவில் இன்று வாணவேடிக்கை நிச்சயம்.
The post வான்கடேவில் இன்று வாணவேடிக்கை நிச்சயம்; 3வது வெற்றி யாருக்கு? சன்ரைசர்ஸ்-மும்பை பலப்பரீட்சை appeared first on Dinakaran.