வாணியம்பாடி: வாணியம்பாடி தனியார் பல் மருத்துவமனையில் தொற்றால் 8 பேர் இறந்த விவகாரத்தில் மருத்துவ குழு ஆய்வு நடத்தி வருகிறது. திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் அறிவு பல் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, 2023ல் வாணியம்பாடி, நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த 10 பேர், பல் சிகிச்சைக்காக சென்றனர்.அவர்களுக்கு டாக்டர் அறிவரசன் சிகிச்சை அளித்தார். சிகிச்சை பெற்ற 10 பேரில் எட்டு பேர், ஆறு மாத இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில், இந்திராணியின் மகன் ஸ்ரீராம்குமார், 32, தன் தாய்க்கு முறையாக பல் சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்தார் எனக்கூறி, வாணியம்பாடி டவுன் போலீஸ், மாவட்ட மருத்துவ இணை இயக்குநர், மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு புகார் மனு அளித்தார்.
இருந்த நிலையில், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தனர்.இதில், பல் சிகிச்சைக்காக, ‘பெரியோஸ்டீயல் லிப்ட்’ எனப்படும் கருவி பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்த மருத்துவமனையில், அசுத்தமான நிலையில் இருந்த அந்த கருவி பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. அசுத்தமான கருவியில் இருந்த பாக்டீரியா, சிகிச்சையின்போது நரம்பு வழியாக மூளைக்கு சென்று, 10 பேரை தொற்றுக்குள்ளாக்கியது. அதில், எட்டு பேர்,நியூரோ மெலியோய்டோசிஸ்’ நோய் பாதிப்பு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த எட்டு பேரும், மூளையில் ஏற்பட்ட ஒரே மாதிரி பாக்டீரியா தொற்றான நியூரோ மெலியோய்டோசிஸ் பாதிப்புக்குள்ளாகி உயிர் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது வேலுார் சி.எம்.சி., மருத்துவமனை மற்றும் ஐ.சி.எம்.ஆர்.என்.ஐ.இ., மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் உட்பட பல அமைப்புகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், மூடப்பட்ட தனியார் பல் மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் தலைமையில் மருத்துவக் குழு ஆய்வு செய்து வருகிறது.
The post வாணியம்பாடி தனியார் பல் மருத்துவமனையில் தொற்றால் 8 பேர் இறந்த விவகாரத்தில் மருத்துவ குழு ஆய்வு..!! appeared first on Dinakaran.