
சென்னை,
நடிகர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் 'வாடிவாசல்' படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு , படப்பிடிப்பு பணி விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளநிலையில், அந்த எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் தான் பொறுப்பேற்க முடியாது என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
'எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் நான் பெறுப்பல்ல. என்னுடைய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தால் நான் மகிழ்ச்சியடைவேன். அதேநேரம் அதற்கு பொறுப்பேற்க முடியாது. என்னுடைய படங்களுக்கு 100 சதவீதம் உழைப்பை மட்டுமே என்னால் கொடுக்க முடியும் ' என்றார்.