மணிப்பூரில் பழிக்கு பழியாக குகி பயங்கரவாத தலைவர் சுட்டு கொலை; போலீசார் குவிப்பு

4 hours ago 2

இம்பால்,

மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மொங்ஜாங் கிராமத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, இன்று மதியம் 2 மணியளவில் அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில், 60 வயது பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மிக நெருங்கிய தொலைவில் இந்த தாக்குதலை மர்ம நபர்கள் நடத்தி உள்ளனர் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தானியங்கி ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதற்கேற்ப, 12-க்கும் மேற்பட்ட காலி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், சுட்டு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் குகி பயங்கரவாத குழுவின் துணை தலைவர் ஆவார். குகி தேசிய அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் 17 ஆயுத குழுக்களில் இதுவும் ஒன்றாகும். இவர் தவிர, குகி தேசிய ராணுவத்தின் உறுப்பினர்கள் 2 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களை ஐக்கிய குகி தேசிய விடுதலை ராணுவம் என்ற எதிரி குழுவை சேர்ந்தவர்கள் சுட்டு கொன்ற தகவல் தெரிய வந்துள்ளது. அவர் தென்கோதங் ஹாவோகிப் என்ற தாபி (வயது 48) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். மற்ற 2 பேர் சேகோகின் (வயது 34) மற்றும் லெங்கவ்ஹாவோ (வயது 35) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அந்த பெண் பால்ஹிங் (வயது 72) என தெரிய வந்துள்ளது.

இதனால், அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்து உள்ளது. பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி வாட்ஸ்அப் குழுக்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் போலீசார் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். எனினும், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் பரவி வருகின்றன.

Read Entire Article