
சென்னை,
சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. இதனால் உடனே படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு பணிகள் தொடங்கவில்லை.
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'ரெட்ரோ' திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 45' படத்தின் படப்பிடிப்பை முடித்தப் பிறகு 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படத்தின் இசையமைக்கும் பணிகளைத் தொடங்கியதாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில், "வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும். ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு வெற்றிமாறன் 25 நிமிடங்கள் கதை சொன்னார். இந்த 25 நிமிடங்கள் போதும் பார்வையாளர்களை கவர்ந்திழுக்க என்று அவரிடம் நான் சொன்னேன். அந்த அளவிற்கு திரைக்கதை அருமையாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.