வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வழிபாடு முறைகள்!!

3 hours ago 4

ராசிமண்டலங்களும் ஊர்களும் இயற்கையோடு தொடர்புடையவை என்பதை நிகழ்வுகள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறே ஒவ்வொருவரின் சுயஜாதகத்தில் உள்ள கிரகங்களும் இடத்துடனும் கிரகங்களுடனும் தொடர்பு கொண்டுள்ளன. அவற்றை உணர்ந்து அதற்குரிய திருத்தலங்களில் வழிபடும் பொழுது பரிகாரங்கள் என்று சொல்லப்படுகிறது. சரியான தருணத்தில் சரியான இடத்தில் சரியாக வழிபட்டால் நிச்சயம் நிகழ்வுகள் அரங்கேறும் என்பது நிதர்சனமான உண்மை.இலஞ்சி தேசத்தில் உள்ள ஜலகண்டபுரம் என்ற நகரை பகீரதன் ஆட்சி செய்து வந்தான். அச்சமயம் ஒருமுறை அவனை காண நாரத முனிவர் வந்திருந்தார். அதிகம் வெற்றி கொண்ட ஆணவத்தால் நாரதரை மதிக்காமல் அவமானம் செய்து அனுப்பினான். கோபத்துடன் திரும்பிய நாரதர் வழியில் கோரன் என்ற அசுரனை காட்டில் சந்தித்தார். அவன் பல தேசங்களுக்கு திக் விஜயம் செய்து வெற்றி கொண்டான். கோரனிடம் நீ பகீரதனை வெற்றி கொண்டால்தான் உன்னுடைய திக் விஜயம் முழுமை பெறும் என சொன்னார். கோரன் பகீரதன் மீது போர் தொடுத்து அவனை வெற்றி கண்டான்.

பகீரதன் தனது ஆணவத்தால் எல்லாவற்றையும் இழந்து காட்டிற்கு சென்றான். நாரத முனியை சந்தித்த பொழுது தன் தவறை உணர்ந்து மன்னித்து அருளும்படி வேண்டினார். நாரதமுனி இரக்கம் கொண்டு துர்வாசரிடம் சென்று முறையிடு உனக்கு நல்வழி பிறக்கும் என வழி சொல்லி அனுப்பினார். பகீரதனும் துர்வாச முனிவரிடம் நடந்த விஷயங்களை கூறி நல்வழிகாட்டுமாறு வேண்டினான். துர்வாசர் பல உபதேசங்களை வழங்கினார். அதன்படி, வெள்ளிக் கிழமை தோறும் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்தால் அழியா பேறு கிடைக்கும் என அறிவுறுத்தினார். அவ்வாறே வழிபட்டு இழந்ததை மீண்டும் பெற்று அழியாத பேறு பெற்றான். பகீரதன் வழிபட்ட ஆலயமே வல்லக்கோட்டை முருகப்பெருமான் திருக்கோயில். வள்ளி தெய்வானை உடனுறை கோடையாண்டவர் என்ற பெயரோடு அருள் தருகிறார். இந்த வல்லக்கோட்டை முருகப் பெருமானுக்கு சனி, செவ்வாய் மற்றும் சுக்ரன் நாமாகரணம் செய்துள்ளது.

* இழந்த சொத்துகளை திரும்ப பெற வெள்ளிக்கிழமை வரும் பௌர்ணமி நாளில் இங்குள்ள வஜ்ரா தீர்த்தத்தில் குளித்து சுவாமிக்கு தாமரை மலர்களால் மாலை தொடுத்து வேல் வைத்து சென்றால் இழந்த சொத்துகளை திரும்ப பெறலாம்.
* வேலை கிடைக்க மற்றும் உயர் பதவிகள் பெற கிருத்திகை நட்சத்திரத்தன்றோ அல்லது பூச நட்சத்திரத்தன்றோ சுவாமி தரிசனம் செய்து கோ தானம் அல்லது அன்னதானம் செய்தால் உத்யோகம் மற்றும் உயர்பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும்.
* நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டவர்கள் சனிக்கிழமை தோறும் வஜ்ரா தீர்த்தத்தில் நீராடி கருப்பு நிற போர்வையை தானமாக கொடுத்தால் சுகம் உண்டாகும்.
* கல்வி முன்னேற்றம் அடைய கேட்டை நட்சத்திரத்தன்று வல்லாரை கீரையும் கருணைக்கிழங்கையும் சுவாமிக்கு படைத்து உணவாக உட்கொண்டால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
* ஒவ்வொரு வாரமும் முருகப்பெருமானை தரிசனம் செய்து கருப்பு நிற பசுவிற்கு உணவு கொடுத்து வந்தால் கட்டிட துறையிலும் இண்டஸ்ரியல் துறையிலும் மிகப்பெரிய வளர்ச்சி அடைவார்கள்.
* சுவாமிக்கு தயிர் வடையும் தாமரை இதழ் மாலைகளும் அணிவித்து வழிபட்டு வந்தால் காதல் திருமணம் சுமுகமாக பெரியோர்கள் ஆசியுடன் நடைபெறும்.

இக்கோயிலுக்கு எப்படி செல்வது?

காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கிழக்கு தாம்பரத்தில் இருந்து முடிச்சூர், ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும், பெரும்புதூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வல்லக்கோட்டை திருத்தலம் உள்ளது.

The post வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வழிபாடு முறைகள்!! appeared first on Dinakaran.

Read Entire Article