சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வந்தாலும் அவப்போது மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மிதமான மழை பெய்தது. குறிப்பாக கோயம்பேடு, அரும்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, மதுரவாயல், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால், சென்னையில் வெப்பம் சற்று தணிந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் வருகிற 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post வரும் 10 முதல் 13ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.