வரலாற்றில் சுபான்சு சுக்லா

4 hours ago 1

சர்வதேச விண்வெளி நிலையம் என்பது பூமியின் தாழ் சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஒரு பெரிய விண்கலமாகும். இது விண்வெளி நிலையமாகவும், அறிவியல் ஆய்வகமாகவும் செயல்படுகிறது. இங்கு விண்வெளி வீரர்கள் தங்கி பல்வேறு அறிவியல் சோதனைகளை மேற்கொள்கிறார்கள். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா போன்ற பல நாடுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி, நுண் புவியீர்ப்பு விசையின் கீழ் அறிவியல் சோதனைகளை மேற்கொள்கிறார்கள்.

அமெரிக்காவின் நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ ஆதரவுடன் அமெரிக்காவை சேர்ந்த ஆக்ஸியம் ஸ்பேஸ் தனியார் நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல இந்தியாவின் சுபான்சு சுக்லா, நாசா முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் சுபான்சு சுக்லா குழுவினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விண்வெளி பயணத்தை தொடங்கினர். இக்குழுவினர் புறப்பட்ட டிராகன் விண்கலம் 28 மணி நேரம் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது. இந்திய வீரர் சுபான்சு சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் சென்ற டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. அங்கு ஏற்கனவே உள்ள வீரர்களுடன், டிராகன் விண்கலத்தில் உள்ள வீரர்கள் தகவல் பரிமாற்றம் செய்தனர்.

பின்னர் டிராகன் விண்கலத்தில் இருந்த சுபான்சு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களை சர்வதேச விண்வெளி நிலைய வீரர்கள் வரவேற்றனர். இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளிக்கு சென்ற 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் சுபான்சு சுக்லாவுக்கு கிடைத்துள்ளது. விண்வெளி செல்லும் திட்டத்துக்காக இந்தியாவை சேர்ந்த சுபான்சு சுக்லா, பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர் அமெரிக்காவில் பயிற்சி பெற்று வந்தனர். இதில் சுபான்சு சுக்லாவை இஸ்ரோ தேர்வு செய்தது.

விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கும் சுபான்சு சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் 30 நாடுகளுக்கு சொந்தமான 60 ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர். அதில், 7 ஆராய்ச்சிகள் இந்தியாவுக்கானவை ஆகும். குறிப்பாக விண்வெளியில் பிராண வாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள் வளர்ச்சி உள்ளிட்ட ஆய்வில் சுபான்சு சுக்லா ஈடுபட உள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ள சுபான்சு சுக்லாவின் அனுபவங்கள் நம் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ 2027ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் அழைத்து வரும் ‘ககன்யான்’ திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.

கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலவின் தென் பகுதியில், நம் நாட்டின் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கி சரித்திரம் படைத்த நிலையில், இந்தியாவின் விண்வெளி தொலைநோக்குத் திட்டத்தின்படி தனது இலக்குகளை அடைய விண்வெளி ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி 2035ம் ஆண்டிற்குள் பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவவும், 2040-க்குள் நிலவில் இந்தியரை தரையிறக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து விண்வெளி அறிவியல் ஆய்வுப் பணிகளுக்கான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

The post வரலாற்றில் சுபான்சு சுக்லா appeared first on Dinakaran.

Read Entire Article