
வந்தவாசியை அடுத்த மழவங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பாள் சமேத மழுவனேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், பூர்ணாஹுதி, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம் உள்ளிட்ட பூஜைகளும், செவ்வாய்க்கிழமை பிம்பசுத்தி, சயனாதிவாசம், பூர்ணாஹுதி, மூலவர் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம், நாடி சந்தானம், தத்வார்ச்சனை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.
இன்று (புதன்கிழமை) காலை யாத்ராதானம், மகா பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கோவிலை வலம் வந்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.