
சென்னை,
தனது காமெடியால் தமிழ் சினிமாவில் கோலோச்சியவர் வடிவேலு. பின்பு ஹிரோவாகவும் நடித்து தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் 'வைகைப்புயல்' என்று அழைக்கப்படுகிறார். அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்த.சியுடன் நடிப்பதாக கேங்கர்ஸ் பட அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது.
'மாமன்னன்' படத்துக்குப் பிறகு பகத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'மாரீசன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'ஆறு மனமே' படத்தை இயக்கியிருந்தார். 2014-ம் ஆண்டு திலீப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'வில்லாலி வீரன்' படத்தை இயக்கியிருந்தார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'மாமன்னன்' படத்துக்குப் பிறகு வடிவேலுவும், பகத் பாசிலும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.