அண்ணாநகர்: முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் (75). இவரது கணவர் பிச்சைமுத்து (85), கடந்த 1991ம் ஆண்டு இறந்து விட்டார். எஸ்தர் தனது மகன் இன்பராஜ் (43), அவரது மனைவி கனிமொழி (33) ஆகியோருடன் வசித்து வந்தார். எஸ்தருக்கு சொந்தமான 3,000 சதுர அடி நிலத்தில் உள்ள வீட்டில் இவர்கள் 40 வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 வருடத்துக்கு முன்பு, முகப்பேர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில், எஸ்தர் ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளார். இதை திருப்பி செலுத்தாததால், வட்டி தொகை சேர்த்து ரூ.1.50 கோடியை செலுத்த வேண்டும், என வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆனால், கடனை செலுத்தாததால், வங்கி அதிகாரிகள் நேற்று எஸ்தர் வீட்டிற்கு சென்று, வீட்டிற்கு சீல் வைக்க உள்ளதாகவும், எனவே, வீட்டை காலி செய்யும் படியும் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, நொளம்பூர் போலீசார் உதவியுடன், எஸ்தர், இவரது மகன் இன்பராஜ், இவரது மனைவி கனிமொழி, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்து வெளியே வர மறுத்த எஸ்தரை, வீல் சேர் மூலம் கொண்டு வந்துவிட்டு, பின்னர் வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். இதனால், எஸ்தர் மன வேதனையில் இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்தர் மகன் இன்பராஜ் கூறுகையில், ‘‘வீட்டின் சொத்து பத்திரத்தை வைத்து ரூ.1 கோடி கடன் வாங்கிய நிலையில், வட்டியுடன் ரூ.1.50 கோடி கட்ட வேண்டும் என வங்கி அதிகாரிகள் எங்களை தரதரவென வெளியே இழுத்து வந்தனர். நடக்க முடியாமல் உள்ள எனது அம்மாவை வீல் சேர் மூலம் தரதரவென இழுத்து வந்து குப்பை தொட்டியின் அருகே கீழே தள்ளியபோது, அதிர்ச்சி அடைந்த எனது அம்மா மன வேதனையில் இறந்துள்ளார். வங்கி அதிகாரிகள் அராஜகத்தால் எனது அம்மாவின் உயிர் பறிபோனது. அவரது உயிரை வாங்கி அதிகாரிகள் கொடுப்பார்களா என கதறி அழுதார். வங்கி சார்பில் கூறுகையில், கடன் கட்ட தவறியதால் நீதிமன்ற உத்தரவின்படி வங்கி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் வீட்டிற்கு சீல் வைத்தோம். மேலும், கடந்த 6 மாதமாக வங்கி சார்பில் கடன் நிலுவை தொகையை கட்ட வங்கி அதிகாரிகளும் அறிவுருத்தி வந்தோம், என்றனர்.
The post வங்கியில் வாங்கிய ரூ.1 கோடி கடனை செலுத்ததால் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள் அதிர்ச்சியில் மூதாட்டி உயிரிழப்பு: முகப்பேரில் பரபரப்பு appeared first on Dinakaran.