
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் ஹரிமா விகார் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராகேஷ் அரோரா (வயது 59). இவர் இன்று பெங்களூருவில் நடைபெறும் தொழில் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருந்தார். இதற்காக அவர் நொய்டாவில் இருந்து டெல்லிக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், டெல்லி விமான நிலையம் செல்வதற்காக இன்று அதிகாலை வாடகை காரை ராகேஷ் புக் செய்துள்ளார். அதிகாலை 3.50 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறிய ராகேஷ் வாடகை காரில் ஏறி பயணித்துள்ளார்.
நெய்டா - டெல்லி சுங்கச்சாவடி அருகே சென்றபோது கார் டிரைவர் உறங்கியுள்ளார். இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் கார் டிரைவரும், ராகேசும் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்த 2 பேரையும் மீட்டு டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமத்தனர். அங்கு ராகேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். மேலும், படுகாயமடைந்த கார் டிரைவர் சுதீருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.