
நெல்லை,
டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கோவை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜிதேந்திர குமார் 9 ரன்களிலும், அவரை தொடர்ந்து சச்சின் 10 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார்த் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து அணியை தொடக்க ஆட்டக்காரர் ஆன சுரேஷ் லோகேஷ்வர் மீட்டெடுத்தார். தனி ஆளாக போராடிய அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்த ஷாருக்கான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த குரு டக் அவுட்டிலும், மாதவ் பிரசாத் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் சுரேஷ் லோகேஷ்வர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் சவாலான நிலையை எட்ட உதவினார்.
இதனைத்தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. நெல்லை தரப்பில் சோனு யாதவ் மற்றும் சச்சின் ரதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் நெல்லை அணியின் சார்பில் சந்தோஷ் குமார் மற்றும் கேப்டன் அருண் கார்த்திக் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
இந்த ஜோடியில் சந்தோஷ் குமார் 7 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய ஹரிஷ் 4 ரன்னும், அருண் கார்த்திக் 4 ரன்னும், ஆதிஷ் 1 ரன்னும், ரிதிக் ஈஸ்வரன் 6 ரன்னும், அஜிதேஷ் 8 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி வந்த சோனு யாதவ் 23 ரன்களில் கேட்ச் ஆனார்.
அடுத்து களமிறங்கிய சச்சின் ரதி 1 ரன்னும், ஓரளவு ரன் சேர்த்த முகமது அட்னென் கான் 26 ரன்களும், செரியன் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நெல்லை அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கோவை அணியின் சார்பில் அதிகபட்சமாக திவாகர் 3 விக்கெட்டுகளும், மணிமாறன் சித்தார்த், புவனேஸ்வரன் மற்றும் கபிலன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.