
சென்னை,
33வயதை எட்டிய விக்ரம் பிரபுவுக்கு, திருமணம் கைகூடாமல் இருக்கிறது. சொந்தத்திலேயே பெண் தர யோசிக்கிறார்கள். நீண்ட தேடலுக்கு பிறகு, கோவையில் வசிக்கும் சுஷ்மிடா பட்டை பேசி முடிக்கிறார்கள். நிச்சயத்தார்த்தம் முடிந்து ஊருக்கு செல்ல தயாராகும் சூழலில், விக்ரம் பிரபு குடும்பத்தினர் வந்த வாகனத்தில் கோளாறு ஏற்படுகிறது. இதனால் 2 நாட்கள் பெண் வீட்டில் தங்குகிறார்கள்.
இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊடரங்கு உத்தரவு அமலுக்கு வருவதால், வேறுவழியின்றி மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் அனைவருமே பெண் வீட்டில் காலவரையின்றி தங்கவேண்டிய சூழல் அமைந்துவிடுகிறது.
இந்த சூழலில் சுஷ்மிதா பட், தனது காதலனுடன் ஓடிப்போய் விடுகிறார். அதன்பிறகு என்ன நடந்தது? விக்ரம் பிரபுவுக்கு திருமணம் நடந்ததா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.கொடுத்த கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், விக்ரம் பிரபு. எதையும் எளிதாக கடந்து செல்லும் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.
அழகான நடிப்பால் கவருகிறார், சுஷ்மிதா பட். நடிப்பில் அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். அவரது சகோதரியாக வரும் மீனாட்சி தினேசின் 'துருதுரு' நடிப்பு கவனம் ஈர்க்கிறது. 'டார்ச்சர்' மாமாவாக வரும் அருள்தாஸ் நடிப்பில் முத்திரை பதித்துள்ளார். ரமேஷ் திலக்கின் நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. கஜராஜ் உள்ளிட்டோர் நடிப்பும் சிறப்பு. சத்யராஜ், ரியோராஜின் 'திடீர்' வருகை ஆச்சரியம்.மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டான் இசையும் படத்துடன் ஒன்ற செய்கின்றன. பின்னணி இசையும் வருடல்.
எளிதாக 'கனெக்ட்' ஆகும் எதார்த்த கதைக்களம் படத்தின் பலம். முதல் பாதியில் இருந்த வேகம், இரண்டாம் பாதியில் குறைந்தது பலவீனம். திருமணம் ஆகாத ஒரு ஆணின் வேதனையை எடுத்துச்சொல்லியதுடன், சாதியின் பேரில் நடக்காமல் போகும் திருமணங்கள் குறித்தும் சுட்டிக்காட்டி, ரசிக்கும்படி படத்தை எடுத்துள்ளார், இயக்குனர் சண்முக பிரியன்.
லவ் மேரேஜ் - கவனம் தேவை
