
சென்னை,
இசைஞானி இளையராஜா தற்போது 'வேலியன்ட்' (Valiant) என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனியை இயற்றியிருக்கிறார். இது வருகிற 8-ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட உள்ளது. இதை முன்னிட்டு திரைப்படத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், திருமாவளவன் உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய திரையுலகின் இசைத்துறையில் மூன்று தலைமுறையாக கோலோச்சி வருகிற இசைஞானி இளையராஜா, ஒரு இந்திய இசையமைப்பாளரால் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட முதல் முழுமையான மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான "வேலியன்ட்" இசையை லண்டன் அப்பல்லோ அரங்கில் நிகழ்த்த உள்ளமைக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து தொடங்கிய தனது இசைப்பயணத்தை தற்போது உலக அரங்கில் எடுத்து சென்று தனக்கென தனி முத்திரை பதித்து, சாதனைகள் பல படைத்து இன்னும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கும், இசைஞானி இளையராஜாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.