ரோந்து பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

6 hours ago 2

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்துவந்த சீனுவாசன் (வயது 40) இன்று (16.3.2025) காலை சக காவலர் மஞ்சுநாதன் என்பவருடன் தொரவி கிராமத்தில், விக்கிரவாண்டி - புதுச்சேரி மாநில நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களில் இரண்டு நபர்களை சக காவலருடன் மடக்கிப்பிடித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

பின்னர் தப்பியோடிய மூன்றாவது நபரை பிடிப்பதற்காக கயத்தூர் கிராமத்தில் தேடிவந்து கயத்தூர் சுடுகாடு அருகே அந்த மூன்றாவது நபரை விரட்டிப் பிடிப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக மயங்கி கீழே விழுந்த தலைமைக் காவலர் சீனுவாசனை சககாவலர் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தலைமைக் காவலர் சீனுவாசன் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தலைமைக் காவலர் சீனுவாசனின் அர்பணிப்புடன் கூடிய பணி எந்நாளும் நினைவு கூறத்தக்கது. அவரது உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சீனுவாசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article