
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.
ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்ட நிலையில் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பன்ட் துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.
முன்னதாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியை தழுவியதால் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
அதன்படி பீல்டிங் பயிற்சியாளராக இருந்த டி.திலீப் மாற்றப்பட உள்ளதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் (மே) நிறைவடைய இருந்தது. இருப்பினும் அவரது ஒப்பந்த காலத்தை பி.சி.சி.ஐ. நீட்டிக்க விரும்பவில்லை என கூறப்பட்டது.
இருப்பினும் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா, பி.சி.சி.ஐ. மற்றும் கவுதம் கம்பீர் இருவரையும் டி. திலீப்பை பீல்டிங் பயிற்சியாளராக தக்கவைக்க பரிந்துரைத்துள்ளார்.
அவரின் கோரிக்கையை ஏற்ற பி.சி.சி.ஐ., டி.திலீப்பின் ஒப்பந்த காலத்தை ஒரு வருடம் நீட்டித்துள்ளது. அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த அபிஷேக் நாயர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், திலீப்பின் பதவிக்காலம் ஒரு வருடம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரே பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.