
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை 18.1 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 36 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வில் ஜேக்ஸ்க்கு வழங்கப்பட்டது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா இதுவரை ஆடிய 6 இன்னிங்ஸ்களில் 82 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். மேலும், கடைசியாக ஆடிய 22 இன்னிங்ஸ்களில் 6 முறை மட்டுமே 20 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். கடந்த சில சீசன்களாகவே பார்ம் இன்றி தவிக்கும் ரோகித் சர்மா ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என கருத்துகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது என இந்திய முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போதே ரோகித் சர்மா விலகுவது நல்லது. ஏனென்றால், வரும் காலங்களில் ரசிகர்களே, போதும்.. ஓய்வு பெறுங்கள் என்று கூற தொடங்கிவிடுவார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா ஒரேயொரு முறை மட்டுமே 400 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். அவர் ஒவ்வொரு சீசனிலும் 500 முதல் 700 ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைக்கும் வீரர் அல்ல. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது, பவர் பிளேவில் அட்டாக் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்று ஆடினார். அணிக்காக தியாகம் செய்தார்.
யாராவது ரோகித் சர்மாவிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோகித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும். நான் விளையாடும் சமயத்தில், பார்மில் இல்லாத போது சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் கொஞ்சம் நிதானமாக விளையாடுமாறு கூறியுள்ளனர். அதனை ரோகித் சர்மாவுக்கு யாராவது சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.