புதுடெல்லி: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்ததை அடுத்து, இந்திய அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை தழுவியது. அந்த தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டம் படுமோசமாக இருந்தது. அவரது தடுமாற்றத்தின் காரணமாக ஓரிரு போட்டிகளில் அவர் கலந்து கொள்வதை தவிர்த்தார். அப்போதே ரோகித் சர்மாவை நீக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் பலர் குரல் கொடுத்தனர். இந்நிலையில், மும்பை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடி வந்த ரோகித் சர்மா, ஓரிரு போட்டிகளை தவிர பெரும்பாலும் சொதப்பலான ஆட்டங்களை அரங்கேற்றி வந்தது, மும்பை அணி ரசிகர்களை முகஞ்சுளிக்க செய்தது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்தார். ஏற்கனவே, டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்தாண்டு அவர் அறிவித்தார். அதே சமயம், ஒரு நாள் போட்டிகளில் மட்டும் ஆடப் போவதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில், ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய டெஸ்ட் அணிக்கு இளம் வீரர் ஒருவரை பிசிசிஐ தேர்ந்தெடுக்கும் என கூறப்பட்டது. சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட பல வீரர்களின் பெயர்கள் அலசப்பட்டன.
இவர்களில், ஷ்ரேயாஸ் ஐயர் சமீப போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பும்ராவும், முதுகில் ஏற்பட்ட காயத்தில் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.
இந்த சூழ்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பெயர் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன. ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஏற்கனவே செயல்பட்டு வரும் அவர், ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ரோகித் ஓய்வை அடுத்து இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக கில் தேர்வு?; பிசிசிஐ தீவிர பரிசீலனை appeared first on Dinakaran.