தர்மபுரி, ஜூன் 2: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில், ரேஷன் அரிசி கடத்தியதாக 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தர்மபுரி தொழில்மையம் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இயங்கி வருகிறது. சமீபத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஐஜி ரூபேஸ் குமார் மீனா, தர்மபுரி அலுவலகத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பது மற்றும் பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் கோவை மண்டல எஸ்பி பாலாஜி சரவணன், சேலம் சரக டிஎஸ்பி வடிவேல், இன்ஸ்பெக்டர் திலகா, சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செம்மலை, கூட்டுறவு இணை பதிவாளர் சரவணன், துணை பதிவாளர் சுந்தரம் மற்றும் தானிய சேமிப்பு கிடங்கு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சார்பில் ரேஷன் அரிசி கடத்தியதாக, மொத்தம் 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தலின் போது மொத்தம் 50,890 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய, 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 116பேர் கைது செய்யப்பட்டனர். 3பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்டதுறை அலுவலர்கள், உறுதுணையாக பணியாற்ற வேண்டும்,’ என்றனர்.
The post ரேஷன் அரிசி கடத்தியதாக தர்மபுரி மாவட்டத்தில் 110 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.