![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38379994-5.webp)
கும்பகோணம்,
திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு நேற்று முன்தினம் மதியம் ரெயில் சென்று கொண்டிருந்தது. தாராசுரம் ரெயில் நிலையம் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் கும்பகோணம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் தஞ்சை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, கும்பகோணம் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தாராசுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி ஆனந்தி(வயது 35) என்பதும், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் மன அழுத்தம் காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.