
பெங்களூரு,
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தியது. இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது நடைமுறையில் உள்ளன.
இந்தநிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு கர்நாடகாவில் 2 முறை மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்தநிலையில், தற்போது மாநிலத்தில் 3-வது முறையாக மதுபானம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் பீர் விலை பாட்டிலுக்கு ரூ.10 அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில், கர்நாடகத்தில் இந்திய தயாரிப்பு மதுபானங்களின் விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஒரு குவார்ட்டர் பாட்டில் விலை ரூ.25 வரையிலும், ஒரு புல் பாட்டில் விலை ரூ.100 வரையும் உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் கலால் வரி வருவாய் இலக்கு ரூ.40 ஆயிரம் கோடியாக அரசு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடையும் நோக்கத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் புதிய விலை உயர்வால் கலால்துறைக்கு கூடுதலாக ரூ.1,400 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுபானங்களின் விலை உயர்வால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.