
ரெயில் பயணத்துக்கே அனைவரும் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதற்கு காரணம் தூங்கும் வசதி, கழிப்பறை வசதி போன்ற பல்வேறு சவுகரியங்களை சொல்லலாம். ஒவ்வொரு ரெயிலும் 2 அல்லது 3 முன்பதிவு அல்லாத பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகளெல்லாம் அதாவது படுக்கை வசதி கொண்ட சாதாரண பெட்டி மற்றும் குளு, குளு வசதிகளை கொண்ட மூன்றாம் வகுப்பு, 2-ம் வகுப்பு, முதல் வகுப்பு பெட்டிகள் இருக்கின்றன. இந்த பெட்டிகளில் பயணிக்க டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யமுடியும். இருந்தாலும் சில நாட்களிலேயே இந்த முன்பதிவு டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடுகின்றன. கடைசிநேரத்தில் பயணம் திட்டமிடுபவர்களுக்காக ரெயில்வே நிர்வாகம் தட்கல் வசதியை நடைமுறையில் வைத்திருக்கிறது.
இந்த முறையின்படி ஒவ்வொரு ரெயிலிலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்ய இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்த தட்கல் டிக்கெட்டினை 24 மணி நேரத்துக்கு முன்னதாக மட்டுமே எடுக்க முடியும். இந்த டிக்கெட்டுகளுக்கு வழக்கமான கட்டணத்தை விட, தட்கல் கட்டணத்தையும் சேர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். தட்கல் டிக்கெட்டுகளை குளுமை வசதி கொண்ட பெட்டிகளுக்கு பயண நாளுக்கு முந்தைய தினம் காலை 10 மணிக்கும், படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டிக்கு 11 மணிக்கும் ஆன்லைன் மூலமாகவோ, ரெயில் நிலைய கவுண்ட்டர்களிலோ பெற்றுக்கொள்ளலாம்.
இந்த தட்கல் டிக்கெட் எடுப்பதிலும் பல முறைகேடுகள் மற்றும் ஆள்மாறாட்டம் இருப்பதாக புகார்கள் வந்தன. பொதுவாக புரோக்கர்கள், ஏஜெண்டுகள் மூலமாகத்தான் டிக்கெட்டுகளை எளிதில் எடுக்கமுடிகிறது என்ற குறை பொதுமக்களுக்கு நிறைய இருந்தது. இதையெல்லாம் போக்கும் வகையில் யார் பயணம் செய்கிறார்களோ அவர்களுக்கே டிக்கெட் கிடைக்க ரெயில்வே நிர்வாகம் புதிய நடைமுறைகளை கொண்டுவந்துள்ளது. இதன்படி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் செயலி மூலம் தட்கல் டிக்கெட் எடுப்பவர்களுக்கு ஆதார் பதிவு வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் கட்டாயமாகிறது. இதன் தொடர்ச்சியாக ஆதார் ஓ.டி.பி.யை பதிவுசெய்தால்தான் 15-ந்தேதி முதல் தட்கல் டிக்கெட் பெறமுடியும். ஆதார் இல்லாதவர்களும், ஆதார் பதிவை செய்ய விரும்பாதவர்களும் ரெயில் நிலைய கவுண்ட்டர்களுக்கு சென்றுதான் டிக்கெட் எடுக்கமுடியும். அவர்களும் தங்கள் செல்போனுக்கு வரும் ஓ.டி.பி.யை கொடுத்துதான் முன்பதிவு செய்யமுடியும். இந்த முறை வரவேற்கத்தக்கது. முறைகேட்டுக்கு இடம் இல்லாமல் உரியவர்களுக்கு சரியான நேரத்தில் டிக்கெட் கிடைக்கும் என்றாலும், இதில் சில நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. எப்போதும் தட்கல் டிக்கெட்டுகள் ஓரிரு நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடுகின்றன.
இனி ஆதார் ஓ.டி.பி. கட்டாயம் என்பதால், அந்த ஓ.டி.பி. வந்த உடன் தான் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும். ஆதார் ஓ.டி.பி. காலதாமதமாக வந்தால் தட்கல் டிக்கெட் எடுப்பதில் சிக்கல் ஏற்படும். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஆதார் ஓ.டி.பி.க்காக காத்து இருக்கும்போது சிலருக்கு டிக்கெட் கிடைத்து, பலருக்கு கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல வீட்டில் வயதானவர்களுக்காக பிள்ளைகள் தங்கள் அலுவலகத்தில் இருந்தபடி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். இனி ஆதார் ஓ.டி.பி. கட்டாயம் என்பதால் பெற்றோரின் செல்போனுக்கு செல்லும் ஓ.டி.பி.யை பிள்ளைகள் வாங்கி டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். இதையெல்லாம் ரெயில்வே நிர்வாகம் ஆழ்ந்து, பரிசீலித்து உரிய முன்னேற்பாடுகளை எடுக்கவேண்டும்.