தூத்துக்குடி, மே 16: தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட, ரூ.6 லட்சம் மதிப்பிலான பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் தடையை மீறி இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவின் பேரில் ஆணையர் மதுபாலன் ஆலோசனைப்படி மாநகராட்சி மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் அதிகாரிகள், ஜெயராஜ் ரோடு பூ மார்க்கெட் அருகில் உள்ள கடையில் சோதனையிட்டனர். அங்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலிதீன் பைகள் என 1.5 டன் எடையிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். ஒருமுறை பயன்படுத்தி விட்டு குப்பையில் வீசி எறியப்படும் பாலிதீன் பை, கப் போன்றவைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தடையை மீறி பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
The post ரூ.6 லட்சம் மதிப்பிலான பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.