சென்னை: படத்தில் நடிக்க பெற்ற ரூ.6 கோடி முன்பணத்தை திரும்ப தரக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு நடிகர் ரவிமோகன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் தயாரிப்பில் உருவாக உள்ள படம் ‘ப்ரோ கோட்’. ரவிமோகன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அவரே கதாநாயனாகனாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் டிக்கிலோனா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில், பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், 2 படங்களில் நடிக்க நடிகர் ரவிமோகனுடன் கடந்த 2024ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அதற்காக அவர் ரூ.6 கோடி முன்பணம் வாங்கியதாகவும் தெரிவித்த நிறுவனம், கால்ஷீட் கொடுத்தும் பணிகளை துவங்காததால் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறது. மேலும், அந்த பணத்தை சொந்த தயாரிப்பு, சொந்த செலவுக்கோ பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ப்ரோ கோட் படத்தை தயாரிக்க, வேறு நிறுவன தயாரிப்பிலும் நடிக்க ரவிமோகனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு நடிகர் ரவிமோகன் பதிலளிக்க உத்தரவிட்டு, வருகிற 23ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
The post ரூ.6 கோடி முன்பணம் விவகாரம்.. நடிகர் ரவிமோகன் பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணை..!! appeared first on Dinakaran.