
திருச்சி,
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி பறவைகள் பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாட்டின் மைய பகுதியில், அனைத்து மாவட்டங்களுக்கும் எளிதில் செல்லும் வகையில் போக்குவரத்து வசதியுடன் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முக்கொம்பு சுற்றுலாத் தலம் மிகவும் புகழ்பெற்றதாகும். அகன்ற ஆறாக இருக்கும் காவிரி ஆறு திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பில் காவிரி, கொள்ளிடம் என்று இரண்டு ஆறுகளாக இயற்கையிலேயே பிரிந்து பல நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகின்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 18.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 4.02 ஏக்கர் பரப்பளவில் திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது மிகச் சிறப்பானதாகும்.
திருச்சி பறவைகள் பூங்காவில் 60,000 சதுர அடி பரப்பளவில் ஐந்திணை என்றழைக்கப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய 5 வகை நில அமைப்புகளை விவரிக்கும் வகையில் அந்த நிலப்பகுதிகளுக்கான அடையாளங்கள் அமைக்கப்பட்டு, அங்கு பல்வேறு வண்ணங்களால் மனதை கொள்ளை கொள்ளும் வகையிலான நூற்றுக்கணக்கான பறவைகள் விடப்பட்டுள்ளன. இந்த பகுதிக்குச் செல்லும் பார்வையாளர்களின் மீது பறவைகள் அமர்ந்து அவர்களிடம் கொஞ்சும் அழகு காண இயலாததாகும். மேலும் இங்கு பார்வையாளர்கள் பறவைகளுக்கான பிரத்யேக உணவினை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பறவைகள் தங்குவதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட குடில்கள் மற்றும் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சுருள் ரெக்கை (FRILL BACK), பொமேரியன் பெளட்டர் (Pomeranian Pouter), கேடய பௌட்டர் (SHIELD POUTER), கிளி மூக்கு (SCANDAROON, வைர புறா (DIAMOND DOVE), நீண்ட முகம் டம்ளர் (Long Face Tumbler), கட்ட வால் (MALTESE), ஓரியண்டல் பிரில் (ORIENTAL FRILL), பூ ரெக்கை (Spanish Chorrera), மூஞ்சி மூடி (JACOBIN), போண்டா புறா (Modena), சின்ன மூஞ்சி (Short face), அழகு ஹோமர் (Beauty homer ), கழுத்தசைப்பான் ( Neck Shaker), கேரியர் புறா (Carrier pigeon), மாக்பை பெளட்டர் (MAGPIE Pouter), அரசன் (KING), செம்பு புறா (ARACHANGEL), ஆகிய புறா வகைகள் தனித்தனியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு வகையான அழகிய கோழியினங்கள், நெருப்புக்கோழிகள், ஈமுக்கள் தனியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல வகை வாத்துகள், பலவகை கிளிவகைகள், பலவகை குருவிகள் தனித்தனியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல வகையான முயல்கள் தனியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி பறவை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கோய் மீன் குளம் (KOI FISH POND) குழந்தைகளை வெகுவாக கவரும்.
இந்தியாவிலேயே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி பறவைகள் பூங்கா மிகப்பெரிய பறவைக் கூடம் என்பது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும். மேலும் இங்கு பறவைகளின் இனப்பெருக்கத்திற்கென தனிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி பறவை பூங்காவில் கூடுதலாக 7டி மினி திரையரங்கில் பார்வையாளர்களுக்கு திரையிடப்படும் படங்கள் முப்பரிமாண காட்சிகளாக அருகில் தெரிவதுடன், காட்சிகளின் அமைப்பிற்கு ஏற்ப தங்களைச் சுற்றி ஈரமாக உணர்வது, தங்கள் உடலை காற்று தழுவுவது, அதிர்வுகளை உணர்தல் உள்ளிட்ட சிறப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரையரங்கில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் 50 பேர் அமர்ந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை ஆர்வலர்கள், செல்லப்பிராணி ஆர்வலர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இந்த பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவினை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (9.2.2025) திறந்து வைத்தார். இந்த திருச்சி பறவைகள் பூங்கா தமிழ்நாட்டின் அனைத்து பகுதி சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு வரப் பிரசாதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.