ரூ.12.50 கோடி ஒதுக்கியும் பணிகளை தொடங்காதது ஏன்?.. மரக்காணம் அருகே தூண்டில் வளைவு இன்றி தவிக்கும் மீனவர்கள்!!

5 hours ago 2

விழுப்புரம்: மரக்காணம் அருகே சின்னமுதலியார் சாவடி மீனவ கிராமத்தில் நிதி ஒதுக்கியும் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தொடங்கவில்லை மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள சின்னமுதலியார் சாவடியில் 300க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் தினம் கடலுக்கு சென்று வருகின்றனர். சுனாமியின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக கடல் சீற்றத்தால் ஆண்டு தோறும் மீனவர்கள் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

படகுகள், வீடுகள், உடமைகளை இழப்பது தொடர்கதையாக உள்ளதால் தூண்டில் வளைவு அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 12 கோடியே 50 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்கப்படாதது மீனவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சின்னமுதலியார் சாவடி மீனவர்கள் தங்களது படகுகளை அருகில் உள்ள தந்திராயன் குப்பம் துண்டில் வளைவு பகுதியில் நிறுத்தி வருகின்றனர். அங்கும் இட நெருக்கடி ஏற்பட்டு படகு சேதமடைவதால் இருதரப்பினர் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. முதலமைச்சர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு சின்னமுதலியார் சாவடி கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post ரூ.12.50 கோடி ஒதுக்கியும் பணிகளை தொடங்காதது ஏன்?.. மரக்காணம் அருகே தூண்டில் வளைவு இன்றி தவிக்கும் மீனவர்கள்!! appeared first on Dinakaran.

Read Entire Article