தஞ்சாவூர், ஜன.17: தஞ்சை மாநகரப் பகுதியில் தஞ்சை பெரியகோயில் கல்லணைக் கால்வாய் பாலம் முதல் இர்வின் பாலம் வரை கல்லணை கால்வாய் ஆற்றின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 540 மீட்டர் நீளத்திலும், 2 மீட்டர் அகலத்துடனும் தாசில்தார் அலுவலக பின்புற பகுதி, பழைய கலெக்டர் அலுவலக பின்புற பகுதி வழியாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் மின் விளக்குகள், பக்கவாட்டில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆத்துப்பாலம் முதல் இர்வின் பாலம் வரை கிரானைட் கற்களில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாநகர பகுதி பொதுமக்கள் காலை, மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் சற்று இளைப்பாறும் இடமாகவும் இந்த நடைபாதை ரூ.1.28 கோடி செலவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. இந்த நடைபாதை தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது. மின்விளக்குகள் சில இடங்களில் உடைந்தும் எரியாமலும் உள்ளன. தடுப்பு கம்பிகள் ஆங்காங்கு பெயர்ந்தும், வளைந்தும், கழன்று விழுந்தும் கிடக்கிறது. தென்புற கரை நடைபாதை இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறி உள்ளது. மேலும் திறந்தவெளி கழிப்பிடமாகவும் இப்பகுதியை சிலர் பயன்படுத்துவதால் பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாநகர மக்கள் பயன்பெற வேண்டி அமைக்கப்பட்ட நடை பயிற்சிக்கான இப்பகுதிகள் சமூக விரோத செயல்களின் பகுதியாக மாறி உள்ளது வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக இந்த நடைபாதைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி உடைந்து போன மின்விளக்குகள், தடுப்பு கம்பிகளை சீரமைக்க வேண்டும். இரவு நேரங்களிலும் சமூக விரோத செயல்களை காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்த வேண்டும். திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் நபர்களை பிடித்து அபராதம் உள்ளிட்ட தண்டனை விதித்து கட்டுப்படுத்த வேண்டும். தொடர்ந்து இந்த நடைபாதையை கண்காணித்து பராமரிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை மாநகரவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
The post ரூ.1.28 கோடி செலவில் அமைக்கப்பட்ட கல்லணை கால்வாய் கரையில் சிதிலமடைந்து வரும் நடைபாதை appeared first on Dinakaran.