புதுக்கோட்டை, ஜூன் 6: புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் சேசய்யா சாலை அருகில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையத்தினை மாவட்ட கலெக்டர் அருணா நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது; தமிழக அரசு ஏழை, எளிய குழந்தைகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் சார்பில், குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், உரிய பாதுகாப்பினை ஏற்படுத்துதல், கல்வி நலனை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த தத்தெடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 5 பெண் குழந்தைகளின் உடல்நிலை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இக்குழந்தைகளை கவனமாகவும், பாதுகாப்பாகவும் பார்த்துக்கொள்வதுடன், குழந்தைகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, இக்கட்டிடத்தில் செயல்பட்டுவரும் நேசக்கரம் குழந்தைகள் இல்லத்தின் செயல்பாடுகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது இல்லத்தில் உள்ள குழந்தைகள் தங்கும் அறை, குளியலறை மற்றும் கழிவறை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு தகுந்த பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வழங்கிடவும், மேலும் இல்லத்தில் உள்ள நூலகத்தில் அதிகளவில் புத்தகங்களை வாங்கி வைக்குமாறும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வுகளில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், புதுக்கோட்டை வட்டாட்சியர் செந்தில்நாயகி, அறங்காவலர் மகேஸ்வரி, குழந்தைகள் நல உறுப்பினர் சுவாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையம் appeared first on Dinakaran.