சேலம்: ரிசர்வ் வங்கி பெயரையும், அதன் சின்னத்தையும் பயன்படுத்தி பணமோசடி நடந்துள்ள நிலையில் புதியதாக இன்ஜினியர், பேராசிரியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மோசடியாக பெற்று வாங்கியுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்ைக எடுத்து வருகின்றனர்.
ரிசர்வ் வங்கி மூலமாக மத்திய அரசிடம் இருந்து இரிடியம் மற்றும் காப்பர் விற்பனைக்காக பெறப்பட்டு பல்லாயிரம் கோடிக்கணக்கான பணத்தை விடுவிப்பதற்கு ரிசர்வ் வங்கிக்கு சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் இதற்காக ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு கமிஷன் செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்தும் போது கூடுதலான வட்டியுடன் கோடிக்கணக்கில் முதலீடு தொகை கிடைக்கும் எனவும் கூறி பொதுமக்களை நம்ப வைத்து சிலர் ஏமாற்றி வந்துள்ளனர். இது தொடர்பாக சேலம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.எஸ்.பி. வினோத் தலைமையிலான குழுவினரின் முதற்கட்ட விசாரணையில் இந்தமோசடியில் பெரிய கும்பலே ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தஞ்சாவூர், சேலம், தெலுங்கானா, கோவை, தர்மபுரி, சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 8க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் விசாரணையில், கடந்த ஒருவாரத்தில் மேச்சேரியை சேர்ந்த இன்ஜினியர் பார்த்தசாரதி, பெங்களூரைச் சேர்ந்த விக்னேஷ்(30), நாமக்கல் சஞ்சய்(33), மயிலாடுதுறையை சேர்ந்த ஜோசப், பாலக்கோடு செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: இன்ஜினியர் பார்த்தசாரதியிடம் இருந்து, மோசடி செய்வதற்கான பத்திரம், லேப்டாப் போன்ற ஆதாரங்கள் சிக்கியுள்ளது. இந்த மோசடிக்காக புதியதாக வெப்சைட் தொடங்கியவர் விக்னேஷ், இவர் தான் போலியான இ-மெயில் முகவரியை தொடங்கி ரிசர்வ் வங்கி என நம்பும்படியான ஆவணங்களையும் தயாரித்து மோசடி செய்துள்ளார். கைதான சஞ்சய், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறை ஜோசப், அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதில் மோசடி பணத்தை சொத்தாக வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு கோவையை சேர்ந்த பெருமாள், முனுசாமி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் 200 பேரை இந்த மோசடியில் புரோக்கராக இருந்து சேர்த்து விட்டுள்ளனர். அவர்களையும் தேடி வருகிறோம். மோசடியாக வாங்கிய சொத்தை ஜப்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த லாரி டிரைவரான செந்தில், இந்த மோசடியில் 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இவர் சுமார் ரூ.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளார். இவர்களிடம் செல்போன், போலியான ஆவணங்கள், உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.
The post ரிசர்வ் வங்கி பெயரை சொல்லி பணமோசடி இன்ஜினியர், பேராசிரியர் உள்பட 5 பேர் கைது: சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை appeared first on Dinakaran.