மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் மத நிகழ்ச்சி கொண்டாட்டத்தின்போது சரமாரி துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 12 பேர் பலியானார்கள். 20 பேர் படுகாயமடைந்தனர்.மெக்சிகோவில் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் இராபுவாடோ நகரில் புனித யோவானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த கொண்டாட்டத்தின்போது, உள்ளூர்வாசிகள், மதுபானம் அருந்தியபடியும், நடனமாடியபடியும் உற்சாகமாக இருந்தனர்.
அப்போது, ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியுடன் வந்தார். கூட்டத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுபற்றிய வீடியோ ஆன்லைனில் வைரலானது. இதுகுறித்து இராபுவாடோ நகர அதிகாரி ரொடால்போ மெஜ் செர்வான்டிஸ், நிருபர்கள் சந்திப்பில் பேசும்போது, ‘துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் காயமடைந்தனர்’ என்றார்.
இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் குவானாஜுவாட்டோ மாகாணத்தின் சான் பர்தோலோ டி பெர்ரியாஸ் நகரில் சர்ச் சார்பில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.ஏற்கனவே மெக்சிகோ நகரத்தின் வடமேற்கே அமைந்துள்ள குவான்ஜுவாடோ, நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாகாணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் 1,435 கொலைகள் நடந்துள்ளன. இது பிற மாகாணங்களில் நடந்துள்ள கொலைகளை விட 2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மத நிகழ்ச்சி கொண்டாட்டத்தின்போது மெக்சிகோவில் சரமாரி துப்பாக்கி சூடு: 12 பேர் பலி; 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.